Tuesday, October 22, 2013

அன்பான இதயங்கள்.............. சௌந்தரமகாதேவன்,திருநெல்வேலி



மனக்குகை ஓவியங்கள்..1
முன் தயாரிப்பற்ற வாழ்வின் நகர்வுகளில் நாம் அடையாளம் காண்கிறோம் அன்பான இதயங்கள் பலவற்றை.
 

குடித்து முடித்த பின்னும் நாத்தேடுகிற இளநீர்த் துளிகளைப் போல் மனம் தேடிஅலைகிறது மாசுமருவற்ற நல்லமனிதர்களை.


இளக்கமாய் இருக்கிறவரைதானே எப்படி வேண்டுமானாலும் இந்த வாழ்வு நமை வசதியாய் வளைக்கும்?


 காற்று அசுரபலத்தோடு இருக்கும்போதும் சிலகணங்களில் நம்மால் மகிழ்வாகத் தூற்றிக்கொள்ளமுடியவில்லை.


எல்லோருக்கும் பிடித்துக் கொள்ள ஒரு சுட்டுவிரல் மிச்சமிருக்கிறது.

அனால் அந்தக் கரத்தைத்தேடித்தான் காலஓட்டம்.


கனிவாயிருக்கிறவரைக் களவாடப்படுகிறோம் எல்லோராலும்.
தெருக்குலையும்படியாக உருக்குலையும் உறவுகள்..


தொலைக்காட்சிகள் முழுக்கக் கொலைக்காட்சிகளாய் மாறியபின் இளந்தளிர்களின் வருடலும் பசுமையின் அடர்பச்சையும் நோக்கி மனம் பயணிக்கிறது.


எதற்கும் அச்சப்பட அவசியமில்லை ஆகாயம் இடிந்து விழுந்துவிடாது.
காத்திருக்கத்தான் வேண்டி இருக்கிறது கனியும்வரை.காலம் நமைக் கரையேற்றும்வரை.


நதி நனைத்த மண்ணில்தான் மண்ணோடு புணர்கிறது மண்வாசனை தேடும் மண்புழு.
 

நின்றுபோன கடிகாரத்தைத்தான் நிறைய உற்றுப்பார்க்கின்றன கண்கள்.
ஈசலுக்கும் திறந்திருக்கும் எப்போதும் இயற்கையின் வாசல்.


சீப்புக்குச் சிக்குவதில்லை எப்போதும் சிலமுடிகள்.


வனங்களை ரணமாக்கிவிட்டு போன்சாய் மரங்களைப் போற்றிப்பாடிக் கொண்டிருக்கிறோம்.


எரியும் மெழுகில் உருகும் ஒளியும் வழியும் வலியும்.



தொடங்கிவை தொடர்வார்கள் உன்னைத் தொடர்பவர்கள்,உண்மையாய் தொடர்பவர்கள்.
 

அன்புசெலுத்து அனைத்தையும் பின்னுக்குத்தள்ளி.


கம்புபற்றி மேல்எழும் வெற்றிலைக்கொடியாய் அன்புபற்றி வளரும் நம்மீதும்.
 

உன் பரிவட்டங்களைவிட உன் ஆளுமைகளைவிட அன்பின் ஆணிவேர் உயர்வானது.


வெறுப்பின் கருப்பு நம் முகத்தை இன்னும் குரூரமாக்குகிறது.


நதிநீரின் இறுதித்துளிகளை நம்பி ஏதோ ஒரு கடைசிமீன் காத்திருக்கலாம்.


அருகில் இருப்பவனையே அக்கரையோடு அன்புசெலுத்தாதவனின் தொலைநோக்கு நமக்கு அவசியமற்றதாகிறது.



அன்பின் விழிகள் அனந்தமயமானது..எப்போதும் இரட்டைக்கண்கள் ஒற்றை இலக்கையே ஒழுங்காகப் பார்க்கமுடியும்.






இன்னும் பகிர்வேன்..........

No comments:

Post a Comment